தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா?: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்!

தினமலர்  தினமலர்
தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா?: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்!

நியூயார்க்: ''முன்னேறிய நாடுகளின் சுயநலப் போக்கால், எங்களைப் போல ஏழை நாடுகளின் மக்கள் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் சாக வேண்டுமா?'' என, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், ஹோண்டுராஸ் அதிபர் ஜூவன் ஆர்லண்டோ ஹெர்னாண்டஸ் உணர்ச்சிகரமாக பேசினார்.


அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு சிறப்பு பொதுக்கூட்டம், சமீபத்தில் துவங்கியது. ஏழை நாடுஇதில், மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த, ஹோண்டுராஸ் நாட்டின் அதிபர், ஜூவன் ஆர்லண்டோ ஹெர்னாண்டஸ் நேற்று பேசியதாவது:பணக்கார நாடுகள், ஏழை நாடுகள் என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், உலக சுகாதார நிறுவனம், 'கோவக்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பு, கொரோனா தடுப்பூசி மருந்து ஆய்வு, கண்டுபிடிப்பு, தயாரிப்பு, வினியோகம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள உள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள், 200 கோடி பேருக்கு தடுப்பூசி மருந்து வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த அமைப்பில், 150க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து உள்ளன.

ஆனால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டும், கோவக்ஸ் அமைப்பில் சேர்வதற்கான காலக்கெடு முடிந்தும், இணையாமல் உள்ளன. இந்நாடுகள் உருவாக்கியுள்ள, தடுப்பூசி மருந்தை, பிற ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது குறித்து, எதுவும் கூறாமல் உள்ளன. பணக்கார நாடுகள் முதலில் தங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கொடுத்த பிறகு தான், பிற நாடுகளுக்கு வழங்க வேண்டும் என நினைத்தால், ஏழை நாட்டு மக்களுக்கு தடுப்பூசி எப்போது கிடைக்கும் என தெரியாது.

எங்களை போன்ற ஏழை நாடுகளின் மக்கள், தடுப்பூசி கிடைக்காமல் சாக வேண்டுமா? இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே, பணக்கார நாடுகளுக்கு ஆதரவாக, ஐ.நா., நடந்து கொள்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை, அதன் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் மறுத்துள்ளார்.

மூலக்கதை