கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.!!!

தினகரன்  தினகரன்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.!!!

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் செப்டம்பர்  30ம் தேதி வரை ஊரடங்கு  அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா  உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி  வருகிறது. அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இன்று காலை நிலவரப்படி, சுமார் 56,46,010 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் 90,020 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், ரயில்வே இணை அமைச்சராக பதவி வகித்த சுரேஷ் அங்காடிக்கு கடந்த செப்டம்பர் 11-ம் தேதி கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து அவர் தனது டுவிட்டரில், நான் இன்று பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின்  ஆலோசனையை எடுத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டார்.இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 11-ம் தேதியில்  இருந்து இன்று வரை 12 நாட்களான மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சுரேஷ் அங்காடி உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கபட்டு  உயிரிழந்த முதல் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்த 4-வது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி ஆகும்.  சுரேஷ் அங்காடி மறைவிற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங்  சேகாவத், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மோஸ் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் அடங்குவர்.

மூலக்கதை