இந்தியாவுடன் உறுதியான நட்புறவு ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்

தினமலர்  தினமலர்
இந்தியாவுடன் உறுதியான நட்புறவு ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்

வாஷிங்டன்:'அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பிடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், இந்தியாவுடன் நிலையான, உறுதியான நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்' என, அவரை ஆதரிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல், நவ., 3ம் தேதி நடக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இங்கே, 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெற, டிரம்பும், பிடனும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.ஆனால், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே, பிடனுக்கு அதிக ஆதரவு உள்ளது.

இந்நிலையில், பிடனை ஆதரிக்கும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில், 'ஓட்டளிக்கும் தர்மம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்த போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவு இணை அமைச்சராக இருந்த நிஷா பிஸ்வால் கூறியதாவது:ஒபாமா அதிபராக இருந்த போது, இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மிகச் சிறப்பாக இருந்தது.

ஜோ பிடன் அதிபரானால், இந்தியாவுடன் உறுதியான, நிலையான நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஹிந்து மதத்தில், உண்மைக்கும், தர்மத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஹிந்து மதத்தின் மீது, ஜோ பிடன் மிகவும் பற்றுக் கொண்டுள்ளார். தன்னை, 'ஹிந்து மதத்தின் பெரும் ரசிகன்' என, 2016ல் டிரம்ப் கூறினார். ஆனால், அதிபரான பின், அவரது நடவடிக்கைகள் பெரும்பாலும், ஹிந்துக்களுக்கு விரோதமாகவே இருந்தது.ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்காவில், ஹிந்துக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

14 இந்திய மொழிகளில் பிரசாரம்

அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசியாவை சேர்ந்தவர்களின் ஓட்டுகளை கவர, ஜனநாயக கட்சி சார்பில், 14 இந்திய மொழிகளில், 'டிஜிட்டல்' பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜோ பிடன் பிரசார குழுவின், நிதி பிரிவு உறுப்பினர் அஜய் ஜெயின் புடோரியா கூறியதாவது:

நவீன தொழில்நுட்பத்தின் மூலம், தெற்காசியாவை சேர்ந்த வாக்காளர்களுக்கு, ஜனநாயக கட்சி சார்பில், தமிழ் உள்ளிட்ட, 14 இந்திய மொழிகளில், தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள பட்டுள்ளது. அத்துடன், பிடனுக்கு ஓட்டளிக்க கோரியும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவிடம் டிரம்ப் தோல்விகொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில், முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு, ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இரண்டு லட்சம் பேர் இறந்துவிட்டனர்.இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியதாவது:கொரோனாவிடம், அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்து விட்டார்.

கொரோனாவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என, டிரம்புக்கு தெரியவில்லை. இந்த தொற்றுடன் எவ்வளவு நாள் வாழ வேண்டும் என, அமெரிக்கர்கள் கவலையுடன் உள்ளனர். கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய தன் கடமையில், டிரம்ப் பெரும் தோல்வி அடைந்துவிட்டார்.இவ்வாறு, ஜோ பிடன் கூறினார்.

மூலக்கதை