நவ.,1 முதல்கல்லூரிகள் திறப்பு: மத்திய அரசு அறிவிப்பு

தினமலர்  தினமலர்
நவ.,1 முதல்கல்லூரிகள் திறப்பு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி : முதலாமாண்டு மாணவர்களுக்கு, நவ.,1 முதல் கல்லுாரிகளை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வாரத்தில் ஆறு நாட்கள் கல்லுாரியை நடத்தவும்,
குளிர் மற்றும் கோடை கால விடுமுறை நாட்களை ரத்து செய்யவும் பரிந்துரைத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, மார்ச், 25ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்பே, நாடு முழுதும், மார்ச், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இதன் பின், பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலால், நடப்பு கல்வியாண்டில் திட்டமிட்டபடி, பள்ளி, கல்லுாரிகளை திறக்க முடியவில்லை. பின், செப்டம்பர் மாதத்தில், கல்லுாரிகளை திறக்க, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் குறையாததால், அதை செயல்படுத்த முடியவில்லை. இதையடுத்து, இந்த கல்வியாண்டில், குறைந்த நாட்களை ஈடுகட்டும் வகையில், கல்லுாரிகளை நடத்துவது பற்றி பரிந்துரைகளை தெரிவிக்க, வல்லுனர் குழு ஒன்றை யு.ஜி.சி., அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, 'ஆன்லைனில்' நடந்து வருகிறது.

மாணவர் சேர்க்கை பணிகளை, அக்டோபர், 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். நவ., 1ம் தேதி முதல், முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்பட வேண்டும்.கொரோனா பரவலால், இழந்த நாட்களை ஈடு செய்யும் வகையில், வாரம், ஆறு நாட்கள் கல்லுாரிகள் நடத்தப்பட வேண்டும்.

குளிர்கால மற்றும் கோடைக்கால விடுமுறை நாட்களை ரத்து செய்ய வேண்டும்.
முதல் செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், அடுத்த ஆண்டு மார்ச், 1ம் தேதி முதல், 7ம் தேதி வரை விடுமுறை அளிக்கலாம். மார்ச், 8ம் தேதி முதல், 26ம் தேதி வரை, முதல் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட வேண்டும். மார்ச், 27ம் தேதி முதல், ஏப்ரல், 4ம் தேதி வரை, முதல் செமஸ்டர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.ஏப்ரல், 5ம் தேதி முதல், இரண்டாம் செமஸ்டருக்கான வகுப்புகள் துவக்கப்பட வேண்டும். தேர்வுக்கு தயாராக ஆக., 1 முதல், 8ம் தேதி வரை விடுமுறை அளித்து, ஆக., 9 முதல், 21 வரை தேர்வை நடத்தலாம். ஆக., 22 முதல், 29 வரை விடுமுறை அளிக்கலாம். ஆக., 30ல் மீண்டும் கல்லுாரியை திறக்கலாம்.இவ்வாறு வல்லுனர் குழு கூறியிருந்தது.

இந்த பரிந்துரையை ஏற்ற யு.ஜி.சி., அதை மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், 'டுவிட்டரில்' நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருந்தாவது.முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரிகளை திறப்பது பற்றி, யு.ஜி.சி., அளித்த பரிந்துரையை, மத்திய கல்வி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. நவ., 1ம் தேதி முதல், கல்லுாரிகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி, யு.ஜி.சி., தெரிவித்துள்ள விதிமுறை பின்பற்ற, பல்கலைகளை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் குறையாத நிலையில், ஆந்திரா, அசாம் உட்பட பல மாநிலங்களில், 9 - 12ம் வகுப்பு வரை, கடந்த, 21ம் தேதி முதல், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் சில திறக்கப்பட்டுஉள்ளன.மேலும் பல மாநிலங்களில், காலாண்டு தேர்வு முடிந்து, அக்., 5ம் தேதி முதல், 9 - 12 வகுப்பு வரை, பள்ளிகளை முழுமையாக திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், கல்லுாரிகளை, நவ., 1ம் தேதி முதல் திறக்க, மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கல்லுாரிகளை திறக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., துணைத் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு



'சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும். அந்த மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக் குழு எடுக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சி.பி.எஸ்.இ. நடத்தும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெறாத மற்றும் அதிக மதிப்பெண்களுக்காக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் துணைத் தேர்வுகள் எழுத விண்ணப்பித்துஉள்ளனர்.இதற்கான தேர்வு நேற்று துவங்கி செப்., 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தேர்வை எழுதும் மாணவர்கள் கல்லுாரிகளில் சேருவதற்கு வாய்ப்பு அளிப்பது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், சஞ்சீவ் கன்னா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.விசாரணையின்போது அமர்வு கூறியதாவது:இரண்டு லட்சம் மாணவர்கள் துணைத் தேர்வை எழுதுகின்றனர்.

அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது. அதுவும் தற்போதுள்ள இக்கட்டான காலகட்டத்தில் இந்த மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.தேர்வுகள் முடிந்த உடன் விரைந்து முடிவுகளை அறிவிக்க சி.பி.எஸ்.இ. நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவர்கள் கல்லுாரி மற்றும் பல்கலைகளில் சேருவதற்கான வாய்ப்புகளை அளிப்பது தொடர்பாக யு.ஜி.சி. தகுந்த முடிவை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக இரு தரப்பும் செப்., 24ம் தேதி தங்களுடைய முடிவுகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியது.விசாரணையின்போது 'அக். 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கும் வகையில் கல்வி ஆண்டு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது' என யு.ஜி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.'இந்த அறிவிப்பு எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்த தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும். இரண்டு லட்சம் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்' என அமர்வு கடுமையுடன் குறிப்பிட்டது.

மூலக்கதை