கர்நாடக அணைகளில் இருந்து 72 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு; காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக அணைகளில் இருந்து 72 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு; காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து 72 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரியில் கரைபுரண்டு வந்து கொண்டிருப்பதால் கரையோர மக்களுக்கு தண்டோரோ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் ஏற்கனவே நிரம்பி உள்ளன. இந்நிலையில் கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 37 ஆயிரம் கனஅடி என மொத்தம் 72 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.



இந்த தண்ணீர் கரைபுரண்டு தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் இருமாநில எல்லையான பிலிண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக 13 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று 11,241 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 12,480 கனஅடியாக அதிகரித் துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் விநாடிக்கு 700 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நீர்வரத்தை விட திறப்பு அதிகளவில் உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

நேற்று 90. 26 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 89. 77 அடியாக சரிந்தது. நீர்இருப்பு 52. 38 டிஎம்சியாக உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீர் இன்று மாலை ஒகேனக்கல்லையும், நாளை அதிகாலை மேட்டூர் அணையையும் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரிக்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

.

மூலக்கதை