ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது எப்படி? : மத்திய,மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவு

தினகரன்  தினகரன்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது எப்படி? : மத்திய,மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவு

புதுடெல்லி : கொரோனோ வைரஸ் தொற்றுக் காரணத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த மாதிரியான நிவாரணம் வழங்குவது என்பது குறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.கொரோனோ நோய் தொற்றுக் காரணத்தினால் நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடிங்கி விட்டது. இதனால் வரலாற்றில் இல்லாத அளவில் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிவப்பு விளக்கு பகுதியில் இருக்கும் பாலியல் தொழிலாளர்களின் வேலையும் நின்றுவிட்டது. இதில் முடக்கம் அறிவிக்கும் முன்னரே அவர்களாகவே தாமாகவே முன்வந்து தொழிலை நிறுத்தியதோடு, வாடிக்கையாளர்களையும் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை பாலியல் தொழிலாளர்களின் வருமானம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதில் இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பெண்கள் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், \'கொரோனோவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால் வருமானம் இன்றி அவர்கள் தவித்து வருகிறார்கள். மேலும் உணவுக்கு கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அதனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கு வகையில் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.இதையடுத்து உத்தரவில்,\'கொரோனோ காலத்தில் பாலியல் தொழில் செய்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளார்கள். அதனால் அவர்களுக்கு ரேஷன் அட்டை இல்லை என்றாலும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும்.அதைப்போன்று அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க வேண்டும். இது அவசர நிலையாக கருத வேண்டிய ஒன்றாகும். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக கொரோனோ காலத்தில் திருநங்கைகளுக்கு உதவுதற்காக எடுக்கப்பட்ட மாதிரியான நடவடிக்கைகளை பாலியல் தொழிலாளர்களுக்கும் அதுபோன்று நிவாரணம் வழங்க முடியுமா என ஆலோசித்து நீதிமன்றத்தில் அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

மூலக்கதை