2 கோடி பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்துவர்: மலாலா

தினமலர்  தினமலர்
2 கோடி பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்துவர்: மலாலா

நியூயார்க்: 'கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக மறைந்தாலும் உலகெங்கும் இரண்டு கோடி பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல மாட்டர்' என நோபளல் பரிசு வென்றுள்ள மலாலா யூசுப்சாய் கூறியுள்ளார்.

ஐ.நா. பொது சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்க உள்ளது. அதையொட்டி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் பங்கேற்றார். பெண் குழந்தைகள் கல்விக்காக போராடி வரும் அவர், நிகழ்ச்சியில் பேசியதாவது: உலக நாடுகள் முன்னேற்றத்துக்காக பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் பெண்கள் கல்விக்காக பெரிதாக எதையும் செய்யவில்லை. அமைதியை உருவாக்கவும் அகதிகளை பாதுகாக்கவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.


அதுபோல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான இலக்குகள் பேச்சளவிலேயே உள்ளன. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின்படி 12 வயது வரை அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். அதிலும் பெண் கல்விக்காக செலவிட வேண்டிய தொகை மற்றும் இதுவரை செலவிட்டதற்கு இடையே உள்ள இடைவெளி பல ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற இலக்குகளை எட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்தாலும் உலகெங்கும் குறைந்தபட்சம் இரண்டு கோடி பெண் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரமாட்டர். இதை தடுப்பதற்கு உலக நாட்டுத் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை