மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயி தற்கொலை; பஞ்சாப்பில் சோகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயி தற்கொலை; பஞ்சாப்பில் சோகம்

பதீந்தா: மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து பஞ்சாப்பில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மத்தியில் அமைந்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



மக்களவையில் பேசிய சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும், ஹர்சிம்ரத் கவுர் பாதலின் கணவருமான சுக்பீர் சிங், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா க்களுக்கு சிரோமணி அகாலி தளம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றார். தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. மேலும், இம்மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகளின் நலனுக்காக வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், பஞ்சாபில் ஒரு விவசாயி விஷம் குடித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் பதீந்தா அடுத்த அக்காவாலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ப்ரிதம் சிங் (50), நேற்று நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது, திடீரென தர்ணா போராட்டத்திற்கு மத்தியில் அமர்ந்து விஷம் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சக விவசாயிகள், அவரை அங்கிருந்து மீட்டு பதீந்தாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை