மேகதாது அணை கட்ட அனுமதி தர வேண்டும்: பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை
பெங்களூரு: மேகதாது உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் கோரிக்கை மனு ஒன்றை பிரதமரிடம் வழங்கினார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:கர்நாடகாவில் கடந்தாண்டைப் போல் இந்தாண்டும் வெள்ளத்தினால் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேசிய பேரிடர் நிவாரண நிதியில்இருந்து அதிக நிதி வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. நீண்ட காலமாக கோரிக்கை அளித்தாலும் இதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி கிடைக்கவில்லை. குடிநீர் மற்றும் நீர்மின்சாரம் தயாரிக்கும் இத்திட்டத்தினால் அண்டை மாநிலத்திற்கு பாதிப்பு கிடையாது. எனவே, விரைவில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும் வகையில் துறை சார்ந்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படவேண்டும். இது போல் கலசாபண்டூரி திட்டத்திற்கும் விரைவாக அனுமதி கிடைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.