அலைபேசியில் ஆபாச படம் பார்லிமென்டில் எம்.பி., சேட்டை

தினமலர்  தினமலர்
அலைபேசியில் ஆபாச படம் பார்லிமென்டில் எம்.பி., சேட்டை

பாங்காக்:தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் எம்.பி. ஒருவர் பார்லி மென்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது அலைபேசியில் ஆபாச படம் பார்த்து கையும் களவுமாக சிக்கினார்.ஆனால் ''இது அவரது தனிப்பட்ட விஷயம்'' என கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் மறுத்து விட்டார்.

தாய்லாந்து பார்லிமென்டில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.நிதி அமைச்சர் பட்ஜெட் உரையை படித்தார். அப்போது ராணுவ ஆதரவு கொள்கை உடைய 'பலாங் பிரசாரத்' கட்சியைச் சேர்ந்த ரொன்னதேப் அனுவாட் என்ற எம்.பி. பட்ஜெட் உரையை பொருட்படுத்தாமல் தன் அலைபேசியில் பெண்களின் ஆபாசப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'பார்லிமென்டில் ஆபாச படம் பார்த்த எம்.பி. ராஜினாமா செய்ய வேண்டும்' என பலரும் வலியுறுத்தினர்.இது குறித்து ரொன்னதேப் அனுவாட் மிகவும் புதுமையான ஒரு விளக்கத்தை அளித்தார்;

அவர் கூறியதாவது:ஒரு பெண் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உதவி கோரி அலைபேசியில் எனக்கு தகவல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.அவர் உண்மையிலேயே ஆபத்தில் சிக்கியுள்ளரா அல்லது பணம் பறிப்பதற்கான நடவடிக்கையா என அறிந்து கொள்வதற்காக அந்த புகைப்படத்தை பார்த்தேன். அது ஆபாச படம் என்பது அப்புறம் தான் தெரிந்தது.இதையடுத்து அந்த புகைப்படத்தை அலைபேசியிலிருந்து அழித்து விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து தாய்லாந்து பார்லிமென்ட் சபாநாயகர் சுவான் லீக்பேய் கூறியதாவது: அலைபேசியில் புகைப்படம் பார்த்தது அந்த எம்.பி.யின் தனிப்பட்ட விவகாரம். அலைபேசியில் எந்த மாதிரியான விஷயங்களை பார்க்க வேண்டும் என பார்லிமென்ட் விதிகள் எதுவும் இல்லை.வேறு எந்த எம்.பி.யும் இது குறித்து புகார் அளிக்கவும் இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை