சட்ட பேரவைக்குள் குட்கா எடுத்த சென்ற விவகாரம் : உரிமை குழு நோட்டீஸை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு வேறு ஒரு நீதிபதிக்கு பரிந்துரை

தினகரன்  தினகரன்
சட்ட பேரவைக்குள் குட்கா எடுத்த சென்ற விவகாரம் : உரிமை குழு நோட்டீஸை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு வேறு ஒரு நீதிபதிக்கு பரிந்துரை

சென்னை:சட்டபேரவைக்குள் குட்கா எடுத்து சென்றது தொடர்பாக உரிமைகுழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை, வேறு ஒரு நீதிபதி விசாரிக்க, நீதிபதி ரவிசந்திரன் பாபு  பரிந்துரை செய்துள்ளார்.தமிழக அரசால் கடந்த 2013ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தடைசெய்யப்பட்டது. ஆனால் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்வதாக குற்றம்சாட்டி, அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21  திமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவைக்குள்  கடந்த 2017ம் ஆண்டு குட்கா பொட்டலங்களை கொண்டு சென்றனர்.இதுதொடர்பாக பேரவை தலைவர் அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில், சட்டபேரவை உரிமை குழு, உரிமை மீறல் நோட்டீஸை அனுப்பியது. அதை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்கள் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 7ல் வழக்கு தொடர்ந்தனர். அதில் ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் மரணமடைந்த நிலையில், மற்றவர்கள் மீதான வழக்கை தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹி  அமர்வு விசாரித்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல் தீர்ப்பளித்தது.அந்த தீர்ப்பில் 2017ல் அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது.மேலும், பேரவை உரிமைக்குழு விருப்பப்பட்டால் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்றும், திமுக எம்.எல்.ஏ-க்கள் அவர்களின் கருத்துக்களை அக்குழுவிடம் முன்வைக்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிமைக் குழு  செப்டம்பர் 07ம் தேதி பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடியது.அதன் முடிவின்படி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு  புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு,  சட்டபேரவை தொடங்கு. நாளான 14ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டது.இந்த புதிய நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த மனுவில், சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தங்களை பங்கேற்க விடாமல் தடுக்கப்பதற்காகவும்,கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாக கையாண்ட விவகாரத்தைச் சட்டமன்றத்தில் எழுப்புவதை தடுக்கும் வகையில்  நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.இந்தநிலையில், இந்த மனுவை விசாரிக்க கோரி திமுக சார்பில் நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி,  ஏற்கனவே இதே வழக்கு 2017 ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தலைமை அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு மீண்டும் என்னிடம் விசாரணைக்கு வந்துள்ளதால் வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்படுகிறது. என்று கூறினார். அதன்படி அடுத்ததாக பரிந்துரையின் படி இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றி விசாரணை நடைபெறும்.    

மூலக்கதை