ஆரக்கிள் - 'டிக்டாக்' ஒப்பந்தம்: ஆய்வுக்கு பிறகே அனுமதி

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:''அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதிசெய்யப் பட்டால் மட்டுமே ஆரக்கிள் - டிக்டாக் நிறுவனங்களின் ஒப்பந்தத்துக்குஅனுமதி அளிக்கப்படும்'' என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் 'டிக்டாக்'செயலிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் தடை விதித்தார்.இந்த செயலி வாயிலாகஅமெரிக்கர்களை பற்றியதகவல்கள் திருடப்படுவதாகஅவர் குற்றம் சாட்டினார்.

அதேநேரத்தில் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் அதற்கு உரிமம் அளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் டிக்டாக் செயலியை வாங்குவதற்காக பைட்டான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாவது:இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி டிக்டாக் செயலியின் பெரும்பாலான பங்கு பைட்டான்ஸ் நிறுவனத்திடமே இருப்பதாக கூறப்படுகிறது.ஆரக்கிள் நிறுவனத்திடம் குறைந்த பட்ச பங்கு மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.எனவே இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ஆய்வு செய்து இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரியவந்தால் மட்டுமே இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.தேச பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

'டிக்டாக்' போலவே சீன நிறுவனத்தின் மற்றொரு செயலியான 'வி சாட்'டுக்கும் அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 'அமெரிக்காவில் உள்ள 'வி சாட்' பயன்பாட்டாளர்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது.வி சாட் செயலிக்கு தான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர அதன் பயன்பாட்டாளர்களை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை