சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள் வேண்டும்

தினமலர்  தினமலர்
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள் வேண்டும்

புதுடில்லி :சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தவே வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்' என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

பதில் மனு தாக்கல்

'சுதர்ஷன் டிவி' என்ற தனியார் 'டிவி சேனலில்' ஒளிபரப்பாக உள்ள ஒரு நிகழ்ச்சியின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.அதில், 'சிவில் சர்வீசஸ் பணியிடங்களை ஆக்கிரமிக்க முஸ்லிம்கள் சதி செய்கின்றனர்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்துஉள்ளது. இது போன்ற 'டிவி சேனல்'களை கட்டுப்படுத்த எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.அதன்படி, மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:பத்திரிகை மற்றும் டிவி ஊடகங்களுக்கு ஏற்கனவே சில வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த வழிகளும் உள்ளன.

வழிமுறை

அதே நேரத்தில் பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகைகளின் பொறுப்பு குறித்து விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து பார்லி.,யில் ஏற்கனவே விவாதிக்கப்படுகிறது. நீதிமன்றத்திலும் விவாதம் நடந்து வருகின்றது.அதனால், இந்த வழக்கில், குறிப்பிட்ட தனியார், 'டிவி' குறித்து மட்டுமே விசாரணை நடத்தலாம்.

ஆனால், ஊடகங்கள் தொடர்பாக விசாரிக்க நீதிமன்றம் விரும்பினால், சமூக ஊடகங்கள் குறித்து விசாரித்து, அவற்றைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் வகுக்கலாம்.சமூக ஊடகங்களில் அதிக அளவில் பொய் செய்திகளும், வெறுப்பு ஏற்படுத்தும் செய்திகளும் வெளியாகின்றன. வேகமாக பரவுவதுடன், சமூகத்தில் அதிக பாதிப்புகளையும், சமூக ஊடகங்கள் ஏற்படுத் துகின்றன. அதனால், நீதிமன்றம் விரும்பினால், அது தொடர்பாக விவாதிக்கலாம். இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை