3, 5, 8 ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் உறுதி!
சென்னை: ''தமிழக பள்ளிகளில், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை,'' என, சட்டசபையில் நேற்று அமைச்சர் செங்கோட்டையன், திட்டவட்டமாக
தெரிவித்தார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, புதிய கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது என, எதிர்ப்பு குரல் எழுப்பும், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தரும் விதமாக, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தர நிர்ணயம்
ஆனாலும் இந்த அறிவிப்பை, சட்டசபை தீர்மானமாக நிறைவேற்ற, அரசு மறுத்ததை ஆட்சேபித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில், தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக, நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களின் கல்வி உரிமைக்கு எதிரானது. மும்மொழி திட்டம், இதுவரை நடைமுறையில் உள்ள, இரு மொழி கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.சமஸ்கிருத மொழிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம், தமிழ் மொழிக்கும், ஏனைய மொழிகளுக்கும் இல்லை. மழலையர் பருவத்தில், முறை சார்ந்த கல்வி என்பது, குழந்தைகளின் உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும் புறம்பானது. மேலும், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு; பிளஸ் 2 கல்வி முறையில் மாற்றம் ஆகியவை, நம் மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படும் கல்வி முறையை சீர்குலைப்பதாகும். குலக்கல்வி திட்டத்தின் மறு வடிவமாக வரும் தொழிற்கல்வி, ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் ஆகியவை, ஏற்க முடியாதவையாக உள்ளன.
பரிந்துரை
'இரு மொழி கொள்கையே கடைப்பிடிக்கப்படும்' என, முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, முதல்வர் விவாதிக்க வேண்டும். சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ் மொழிக்கு விரோதமான தேசிய கல்விக் கொள்கையை, முழுமையாக எதிர்க்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.இது தொடர்பாக, அ.தி.மு.க., - ராஜன் செல்லப்பா, காங்கிரஸ் - விஜயதாரணி, முஸ்லிம் லீக் - அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி - தமிம்முன் அன்சாரி ஆகியோரும் பேசினர்.விவாதத்திற்கு பதிலளித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:புதிய தேசிய கல்வி வரைவு கொள்கை, 2019 மே, 31ல் வெளியிடப்பட்டது. அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டி, ஜூன், 26ல், பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.
மும்மொழி கொள்கை கூடாது என்பது தான் அரசின் நிலைப்பாடு. இரு மொழிக் கொள்கை தான், நம் கொள்கை; அதைத் தான் கடைப்பிடிப்போம்.கல்வி முறையை மாற்றி அமைப்பது, சரியாக இருக்காது. பள்ளி மற்றும் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, தேசிய தேர்வு முறை கூடாது. இதையெல்லாம் ஏற்கனவே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.இப்போது, புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து பரிசீலித்து, அரசுக்கு பரிந்துரை செய்ய, கல்வியாளர்கள் அடங்கிய இரு வல்லுனர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நடவடிக்கை
குழு அறிக்கை கிடைத்ததும், அவற்றை பரிசீலித்து, முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.ஜெ., அரசு, சமூக நீதியை விட்டுக் கொடுக்காது. கூட்டாட்சி தத்துவத்திற்கு பங்கம் ஏற்பட்டால், அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.மத்திய அரசு, எந்த தேர்வை கொண்டு வந்தாலும், அதை எழுதும் திறன் பெறக்கூடிய வகையில், நம் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, எந்த நிலையிலும் தன் கொள்கையில் இருந்து மாறாது. ஒருபோதும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.மத்திய அரசு வலியுறுத்தினாலும், சில கொள்கை முடிவிலிருந்து, அரசு பின்வாங்காது. அதேபோல், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு கிடையாது. இதில், அரசு பின்வாங்காது. பள்ளிகளில், சத்துணவு திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
ஸ்டாலின்: அமைச்சர் விளக்கத்தை, தீர்மானமாக நிறைவேற்றுங்கள்.
அமைச்சர் செங்கோட்டையன்: வல்லுனர் குழு அறிக்கை அளித்ததும், அவற்றை ஆய்வு செய்து, முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்.ஸ்டாலின்: அரசின் விளக்கத்தை விட, தீர்மானம் தான் ஒட்டுமொத்த சட்டசபை எண்ணத்தை வெளிப்படுத்தும். தீர்மானம் நிறைவேற்ற, அரசு முன்வராததை கண்டித்து, வெளிநடப்பு செய்கிறோம். இதையடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்திற்கு பின், மீண்டும் சபைக்கு திரும்பினர்.
சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: நீங்கள் ஏற்றுக் கொண்டதை, தீர்மானமாக நிறைவேற்ற, ஏன் தயக்கம்; மத்திய அரசுக்கு எதிராக, தீர்மானம் போட தயங்குகிறீர்கள்.
முதல்வர்: நீங்கள் திசை திருப்புகிறீர்கள். எங்கள் கொள்கை, இரு மொழிக் கொள்கை. அதில் பின்வாங்குவது கிடையாது. தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய, வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் தரும் அறிக்கையை பொறுத்து, நாம் முடிவு செய்யலாம்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.
சட்டசபை நிறைவு!
தமிழக சட்டசபை, மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.சட்டசபை கூட்டத்தொடர், 14ம் தேதி துவங்கியது; நேற்று நிறைவடைந்தது. மறு தேதி குறிப்பிடாமல், சட்டசபையை ஒத்தி வைப்பதாக, நேற்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தில் மொத்தம், 24 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன; நேற்று மட்டும், 19 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.அவற்றில் முக்கியமானவை:
* மருத்துவக் கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதா
* ஜெ., பங்களாவை அரசுடைமையாக்கும் மசோதா
* அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்கும் மசோதா
* நகர்ப்புற உள்ளாட்சிகளின் தனி அலுவலர் பதவிக் காலத்தை நீட்டிக்கும் மசோதா
* வரதட்சணை கொடுமைக்கு அதிகபட்சமாக, 10 ஆண்டு சிறை தண்டனை தரும் மசோதா.