'மாஸ்க் அணியாதோர் கல்லறை தோண்ட வேண்டும்'

தினமலர்  தினமலர்
மாஸ்க் அணியாதோர் கல்லறை தோண்ட வேண்டும்

ஜகார்த்தா: முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்கள், கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்ட வேண்டும் என்ற, நூதன தண்டனை இந்தோனேசியாவில் வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவது பல்வேறு நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் பொது வெளியில் நாடமாடும் நபர்களுக்கு சிறை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தோனேசியாவில் இதுவரை 2.25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது; 8,965 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் முகக் கவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.



இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள் தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது, பணியாளர்கள் குறைவாக உள்ளனர். எனவே, முகக் கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா காலத்தில் முக கவசம் மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த தண்டனையானது விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும்' என்றனர்.

மூலக்கதை