நீட், ஜேஇஇ தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
புதுடெல்லி: நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை தவற விட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் நாடு முழுவதும் கடந்த 13ம் தேதி தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்பட்டது. அதேபோன்று ஜே.இ.இ தேர்வு கடந்த 1 முதல் 6ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டு அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரோனோ வைரஸ் தொற்று காரணத்தினால் மேற்கண்ட தேர்வுகளை எழுதாமல் பல மாணவர்கள் தவற விட்டனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டை விட 13 சதவீத மாணவர்கள் தற்போது நீட் தேர்வை எழுதவில்லை. இதே நிலை தான் நாடு முழுவதும் உள்ளது.இந்த நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,”கொரோனா தொற்றுக் காரணத்தினால் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடந்து முடிந்த நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை எழுத முடியாமல் போனது. அதனால் தேர்வு எழுதத் தவறி மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த தேதி ஒதுக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கோரிக்கை கொண்ட மனுவை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.