ஐநா மகளிர் ஆணைய தேர்தல் சீனாவை வீழ்த்தியது இந்தியா

தினகரன்  தினகரன்

ஐக்கிய நாடுகள்: ஐநா மகளிர் ஆணைய தேர்தலில் சீனாவை வீழ்த்தி இந்தியா மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஐநா சபையின் பொருளாதார, சமூக கவுன்சில் அமைப்பின் ஓர் அங்கமான மகளிர் நிலை ஆணையம், பாலின சமத்துவம், பெண்களின் மேம்பாட்டுக்கான பணிகளை செய்து வருகிறது. இது ஐநாவின் முக்கியமான அமைப்புகளில் ஒன்றாகும். இந்நிலையில் மகளிர் ஆணைய உறுப்பினர் இடத்துக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன. 54 பேர் வாக்களித்த நிலையில், இந்தியாவுக்கு 38 வாக்குகளும், ஆப்கானிஸ்தானுக்கு 39 வாக்குகளும் கிடைத்தன. சீனா 27 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. இது குறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தனது டிவிட்டரில், ‘‘பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலிங் அமைப்பான ஐக்கிய நாடுகளின் மகளிர் நிலை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இது இந்தியா அனைத்து துறைகளிலும் பெண்கள் சமத்துவத்தை உறுதிபடுத்தியதற்கு கிடைத்த வெகுமதி மற்றும் ஒப்புதல் ஆகும். இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி’’ என்றார். அடுத்த 4 ஆண்டுகளுக்கு மகளிர் நிலை ஆணைய உறுப்பினராக இந்தியா பதவி வகிக்கும். கடந்த ஜூன் 18ம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் இந்தியா 8வது முறையாக வெற்றி பெற்று தேர்வான நிலையில், மகளிர் நிலை ஆணைய உறுப்பினராகி இருப்பது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை