'டிக்டாக்'கை வாங்கும் முயற்சி: 'மைக்ரோசாப்ட்'டுக்கு தோல்வி

தினமலர்  தினமலர்
டிக்டாக்கை வாங்கும் முயற்சி: மைக்ரோசாப்ட்டுக்கு தோல்வி

நியூயார்க்:அமெரிக்காவில்,'டிக்டாக்' வணிகத்தை வாங்குவதில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதைஅடுத்து, மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளி, 'ஆரக்கிள்' நிறுவனம் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

டிக்டாக் நிறுவனத்தின் வணிகம்,செப்டம்பர் 20ம் தேதிக்குள் ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்படாவிட்டால், அது தடை செய்யப்படும் என அறிவித்திருந்தார், அமெரிக்க அதிபர் டிரம்ப். இதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க வணிகத்தை, அதன் தாய்நிறுவனமான சீனாவைச் சேர்ந்த,'பைட்டான்ஸ்' நிறுவனத்திடமிருந்து வாங்க, மைக்ரோசாப்ட், ஆரக்கிள் உள்ளிட்டவை முன்வந்தன.

இச்சூழலில், கடந்த ஞாயிறு அன்று, டிக்டாக்கின் அமெரிக்க வணிகம் தங்களுக்கு விற்கப் பட மாட்டாது என, பைட்டான்ஸ் தெரிவித்துள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.ஆனாலும், ஆரக்கிள் நிறுவனத்துடன் எத்தகைய ஒப்பந்தத்தை, பைட்டான்ஸ் மேற்கொள்ள இருக்கிறது என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இது குறித்து, 'வால்ஸ்ட்ரீட்' பத்திரிகை, ஆரக்கிள் நிறுவனத்தை, அமெரிக்காவில் டிக்டாக்கின், 'நம்பகமான தொழில்நுட்ப பங்குதாரர்' என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அது ஒரு முழுமையான விற்பனையாக இருக்காது என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும், அடுத்தகட்டமாக வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்காவின் அன்னிய முதலீட்டுக் குழு இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விற்பனை என்பதற்கு மாறாக, பங்குதாரர்களாக மாற்றும் வகையில் தான் டிக்டாக்கின் நடவடிக்கை இருக்கும் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில், சீனா கடந்த மாதம் புதிய விதிமுறைகளை வெளியிட்டது.


அதன்படி, சீன அரசாங்கத்தின் வெளிப்படையான அனுமதியின்றி, டிக்டாக் தன் தொழில் நுட்பத்தை வெளிநாட்டினருக்கு மாற்ற இயலாது. இதன் காரணமாக, தரவுகள் உள்ளிட்ட வற்றில் பாதுகாப்பை அமெரிக்காவுக்கு உறுதிப்படுத்தும் வகையில், ஏதாவது ஒரு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தை கூட்டாளி ஆக்கவே, டிக்டாக் முயலும் என்றும் சொல்லப்படுகிறது.ஆரக்கிள் நிறுவனம் என்ன செய்ய இருக்கிறது என்பது குறித்து, இதுவரை அதன் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

மூலக்கதை