ரவுடிக்கு 354 நாள் சிறை
அண்ணா: சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் (21). பிரபல ரவுடி. கடந்த மாதம்,’இனிமேல் நான் எந்தவித குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன்’ என திருவல்லிக்கேணி துணை ஆணையர் தர்மராஜன் முன்பு நன்னடத்தை பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கார்த்திக் என்ற வாலிபரை சரமாரியாக தாக்கிய வழக்கில் போலீசார் அவர் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அபினேஷை தேடி வந்தனர். தலைமறைவாக திரிந்த அபினேஷை இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதனையடுத்து நன்னடத்தைப் பத்திரம் எழுதி கொடுத்து ஓராண்டுக்குள் அதை மீறி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் துணை ஆணையர் தர்மராஜன் முன்பு நிறுத்தப்பட்டார். அபினேஷை 354 நாட்கள் சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து போலீசார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.