தடுப்பு மருந்து வரும் வரை பாதுகாப்பு அவசியம்:சவுமியா

தினமலர்  தினமலர்
தடுப்பு மருந்து வரும் வரை பாதுகாப்பு அவசியம்:சவுமியா

சென்னை, ; ''கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து வரும்வரை, அனைவரும் தற்போதைய பாதுகாப்பு நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும்,'' என, உலக சுகாதார நிறுவனத்தின், முதன்மை ஆராய்ச்சி யாளர், டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், 'கோவிட் -19'க்கான, முதல்வரின் சிறப்பு விருது, சவுமியா சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.

பொறுப்புணர்வு



விருது பெற்ற பின், அவர் அளித்த பேட்டி:கொரோனா தடுப்பு மருந்து வரும் வரை, அனைவரும் பொறுப்போடு செயல்பட வேண்டும். தமிழகத்தில், அரசு தரப்பில், அதிக பரிசோதனை நடத்த வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களை, 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். இது, அரசு செய்ய வேண்டிய பணி.

இதை, அரசு செய்வதால், தமிழகத்தில் நோய் தொற்று குறைந்துள்ளது. அரசு மட்டும், அனைத்தையும் செய்ய முடியாது. மக்களுக்கும் பொறுப்புணர்வு உண்டு. முக கவசம் அணியாமல், வெளியில் செல்லக் கூடாது. காற்று இல்லாத இடத்தில், நோய் தொற்று உள்ளவருடன் இருந்தால், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும்.இதை தவிர்க்க, முக கவசம் அணிய வேண்டும்; கைகளை கழுவ வேண்டும். கூட்டம் கூடும் இடத்தை தவிர்க்க வேண்டும் என, மக்களுக்கு உலக சுகாதார நிறுவனம் சார்பில், அறிவுரை வழங்குகிறோம்.இதை கடைப்பிடித்தால், நம்மை பாதுகாப்பதுடன், மற்றவர்களையும் பாதுகாக்கலாம். இதை செய்தால், நோயை கட்டுப்படுத்த முடியும்.

வழக்கமாக, புதிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்க, ஐந்து முதல், 10 ஆண்டுகளாகும். ஆனால், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இணைந்து, குறைந்தபட்சம், ஒன்றரை ஆண்டு களில், தடுப்பு மருந்து உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.ஆராய்ச்சிதடுப்பு மருந்து கண்டு பிடிப்பதற்கான, வழிமுறைகளை வெளியிட்டு உள்ளோம்.பல நாடுகளில் ஆராய்ச்சி நடக்கிறது. அவர்கள் சோதனைகளை முடித்து, விபரங்களை, உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். அதை சரி பார்த்த பின் தான், அனுமதிக்க முடியும். இதுவரை, எந்த தடுப்பு மருந்தும், அந்த நிலைக்கு வரவில்லை. இந்த ஆண்டுக்குள், ஒன்று அல்லது இரண்டு தடுப்பு மருந்துகள், ஆய்வக பரிசோதனை முடிந்து வரும் என்று, எதிர்பார்க்கிறோம்.

கொரோனா நோய் தொடரும்.



ஊரடங்கு பிறப்பித்தாலும், அதை அழிக்க முடிய வில்லை; கட்டுப்படுத்த முடியும். அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை. தடுப்பு மருந்து வரும் வரை, தற்போதைய நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை