முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.!!!

தினகரன்  தினகரன்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.!!!

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84), கடந்த 10ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கொரோனா தொற்றும் இருந்தது. மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவை சரி செய்வதற்காக அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை சார்பில் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று முன்தினம் திடீரென்று பிரணாப் முகர்ஜி காலமாகி விட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது. தொடர்ந்து, எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆதலால் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, கடந்த 12-ம் தேதி பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடரந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார் என்று மருத்துவமனை மீண்டும் தெரிவித்தது. இதை தொடர்ந்து, இன்று காலையில் டெல்லி ராணுவ மருத்துவம் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அறிக்கை அளித்துள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்ட நிலையில் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் குழு உன்னிப்பாக கண்காணிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை