முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு கிடைப்பத்தை அரசு உறுதி செய்க : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

தினகரன்  தினகரன்
முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு கிடைப்பத்தை அரசு உறுதி செய்க : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

சென்னை : முழுஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மா உணவகங்களை திறந்து காலை, மாலை, இரவு என 3 வேளையும் உணவு கிடைப்பத்தை அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்,\' நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றும் தணியாமல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் பாத்திப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறுநடவடிக்கை எடுத்தாலும்,அது போதுமானதாக இல்லை, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நோய் தொற்று என்பது நாள் தோறும் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் ஒன்றாக கூடுவது தவிர்க்கப்படுகிறது.அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 1&ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் வாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோல், இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்குக்கு அரசு உத்தரவிட்டது.அதன்படி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. முழு ஊரடங்கில் மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதியில்லை. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், உரிய காரணங்களுக்காகவும் வெளியில் வர அனுமதி உண்டு.தற்போது ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் தமிழகத்தில் உணவகங்கள் அனைத்து மூடப்படுகின்றன. இதனால் சாலையோரம் வசிப்பவர்கள், வெளி மாவட்டங்களிலிருந்து பிற மாவட்டங்களில் வேலை பார்ப்பவர்கள் உணவகங்களை நம்பியே இருக்கின்றனர். இந்த முழு ஊரடங்கு நாட்களில் உணவகங்கள் அனைத்தும் அடைக்கப்படுவதால், சாலைவாசிகள், வெளி மாவட்டத்தவர்களுக்கு உணவு இல்லாமல் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த இன்னலை போக்கும் வகையில் முழுஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மா உணவகங்களை திறந்து காலை, மாலை, இரவு என 3 வேளையும் உணவு கிடைப்பத்தை அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்\' இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை