பெங்களூரு வன்முறை..: நாகவாரா பகுதி கவுன்சிலரின் கணவர் உள்பட மேலும் 60 பேர் கைது செய்தது காவல்துறை!

தினகரன்  தினகரன்
பெங்களூரு வன்முறை..: நாகவாரா பகுதி கவுன்சிலரின் கணவர் உள்பட மேலும் 60 பேர் கைது செய்தது காவல்துறை!

பெங்களூரு: பெங்களூரு வன்முறை தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உள்பட மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு மாநகர மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் வகையில் புலிகேசிநகர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட தேவர்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி மற்றும் காவல்பைரசந்திரா பகுதியில் கடந்த 11ம் தேதி இரவு காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு, அவரது சகோதரி வீடுகளின் மீது தாக்குதல் நடத்திய கும்பல், தேவர்ஜீவனஹள்ளி மற்றும் காடுகொண்டனஹள்ளி போலீஸ் நிலையங்களையும் சூறையாடியது. போலீஸ் வேன், கார், ஜீப் உள்பட 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. கலவரத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாஜித்கான், யாஷின்பாஷா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இதனிடையில், வன்முறையில் ஈடுபட்ட அமைப்பின் நிர்வாகி முஜாமில் பாஷா, சையத் மசூத், ஆயோஜிகான், அல்லாபிச்சை உள்பட 17 பேர் மீது தேவர்ஜீவனஹள்ளி போலீசார் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர்களுடன்  இதுவரை 146 பேர் கைது செய்தனர். அவர்களை காணொலி மூலமாக நீதிபதியின் முன் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சி நாகவாரா பகுதி கவுன்சிலர் இர்சாத் பேகத்தின் கணவர் கலீம் பாசா உள்பட மேலும் 60 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இத்துடன் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளதாகப் பெங்களூரு மாநகரக் காவல் இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை