ராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் உட்பட இலங்கை அமைச்சரவை பதவியேற்பு

தினமலர்  தினமலர்
ராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் உட்பட இலங்கை அமைச்சரவை பதவியேற்பு

கொழும்பு; இலங்கையில் பிரதமர், மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது. ராஜபக்சே குடும்பத்தில், நான்கு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

நம் அண்டை நாடான இலங்கையில், சமீபத்தில் நடந்த தேர்தலில், மகிந்த ராஜபக்சே தலைமையிலான, இலங்கை மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மகிந்த ராஜபக்சே, மீண்டும் பிரதமரானார். அவருடைய சகோதரர், கோத்தபயா, ஏற்கனவே அதிபராக உள்ளார்.இந்நிலையில், 28 கேபினட் அமைச்சர்கள், 40 இணை அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை, நேற்று பதவியேற்றது.

இதில், ராணுவத் துறையை, கோத்தபயா வைத்துக் கொண்டார். நிதி உள்பட மூன்று முக்கிய துறைகள், மகிந்த ராஜபக்சேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, ஊரக வளர்ச்சி மற்றும் புத்த மத விவகாரத் துறையையும் அவர் கவனிப்பார்.ராஜபக்சே சகோதரர்களில் மூத்தவரான, சமல் ராஜபக்சே, நீர்பாசனத் துறை கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார். மேலும், உள்நாட்டு பாதுகாப்பின் இணையமைச்சர் பொறுப்பும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சமல் ராஜபக்சேவின் மகன், சஷீந்திர ராஜபக்சே, இணையமைச்சராக பொறுப்பேற்றார்.மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன், நமல் ராஜபக்சே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கேபினட் அமைச்சரானார்.இதன் மூலம், அமைச்சரவையில், மகிந்த உட்பட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர்.

கண்டியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், இவர்களுக்கு, அதிபர், கோத்தபயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கட்சியின் மூத்த தலைவரான, தினேஷ் குணவர்த்தனே, வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றார்.பிராந்திய நாடுகளுடனான ஒத்துழைப்பு என்ற புதிய இணை அமைச்சர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது.முன்னாள் அதிபர், மைத்ரிபால சிறீசேனாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தன் வழக்கறிஞரான அலி சாப்ரியை, சட்ட அமைச்சராக, கோத்தபயா நியமித்துள்ளார்.

மூலக்கதை