கிருமிகளுடன் போராடிக் கொண்டே வளர்ச்சி: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி

தினமலர்  தினமலர்
கிருமிகளுடன் போராடிக் கொண்டே வளர்ச்சி: இன்போசிஸ் நாராயணமூர்த்தி

பெங்களூரு: கொரோனாவை முன்னிட்டு பொருளாதார செயல்பாட்டை நிறுத்தி வைக்க முடியாது. கிருமிகளுடன் போராடிக் கொண்டே வளர்ச்சியை பெற வேண்டும் என, இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதேசமயம், கொரோனா பாதிப்பால், நாட்டின் ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சுதந்திரம் பெற்றதிலிருந்து இல்லாத வகையில், மிக குறைந்த வளர்ச்சியை எட்டக்கூடும் என்ற தன்னுடைய அச்சத்தையும் அவர் வெளியிட்டு உள்ளார். 'இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி' சார்பான காணொளி கூட்டத்தில், இந்தியாவின், 'டிஜிட்டல் புரட்சி' குறித்த கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கொரோனாவுக்கான தடுப்பூசி, இந்தியாவுக்கு வருவதற்கு, 6 முதல், 9 மாதங்கள் வரை ஆகும். ஒரு நாளைக்கு, 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதாக இருந்தாலும், 140 நாட்கள் பிடிக்கும். இந்நோய் பரவலை தடுக்க நீண்ட காலமாகும்.ஆனால், அதற்காக நாம் பொருளாதாரத்தை நிறுத்தி வைக்க முடியாது. எனவே, அனைவரும் புதிய வழமைக்கு மாற வேண்டும். அது நம் பொருளாதாரத்தை வளர்க்கும் வகையில், அதே சமயம் கிருமிகளுடன் போராடும் வகையில் அமைய வேண்டும்.

பொருளாதாரத்தை மீண்டும் பழைய பாதைக்கு கொண்டுவர, ஊர் சென்றுவிட்ட, 14 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு மீண்டும் திரும்ப வகை செய்ய வேண்டும்.வீட்டில் இருந்து பணிஆற்றும் வாய்ப்பில்லாத நிறுவனங்களுக்கு, சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து, உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். வணிகங்கள் மற்றும் பொதுமக்கள், 24 மணி நேரம் செயல்பட ஏதுவாக, பொது போக்குவரத்து மற்றும் பொது பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை