விபத்தில் உயிரிழந்த மனைவிக்கு சிலை அமைத்த தொழிலதிபர்: கனவு இல்லத்தில் நினைவை வெளிப்படுத்திய கணவர்

தினகரன்  தினகரன்
விபத்தில் உயிரிழந்த மனைவிக்கு சிலை அமைத்த தொழிலதிபர்: கனவு இல்லத்தில் நினைவை வெளிப்படுத்திய கணவர்

பெங்களூரு: விபத்தில் உயிரிழந்த மனைவியின் நினைவாக தத்ரூபமான சிலை ஒன்றை அமைத்துள்ளார் தொழிலதிபர் ஒருவர். பார்ப்பவர்கள் மனதில் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. கொப்பள் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ் குப்தாவின் அன்பு மனைவி மாதவி. இவர் 2017-ம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். மனைவியின் ஆசைக்காக வீடு கட்டி வந்த சீனிவாஸ், அவரது மறைவுக்குப் பிறகு பணிகளைக் கிடப்பில் போட்டார். பின்பு மகள்களின் வற்புறுத்தலால் வீடு கட்டி முடித்துள்ளார். எனினும், புதிய வீட்டில் மனைவி இல்லாத மனக்குறை தெரியக் கூடாது என்று யோசித்த போதுதான், சிலை வைக்கலாம் என்று தோன்றியுள்ளது. பெங்களூரு சிலை வடிவமைப்பாளர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க, அவர் உயிரோட்ட உள்ளதாக மாதவியின் சிலையைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். கிரகப்பிரவேசத்தின் போது விருந்தினர்களை வரவேற்பது போல் வராண்டாவில் வைக்கப்பட்ட இந்த சிலையைக் கண்டுதான் பலரும் ஆச்சரியம் அடைந்ததுடன், நெகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். நிஜத்தில் சோபாவில் மாதவி அமர்ந்திருப்பது போலவே இருந்தது என்று பார்ப்பவர்கள் கூறியுள்ளனர். இது பற்றி சீனிவாஸ் கூறுகையில், ‘‘என்னுடைய வாழ்க்கையில் எல்லாமே எனது மனைவிதான். எனக்கு சக்தி இருந்தால் இறந்த அவருக்கு உயிர் கொடுத்திருப்பேன். அது முடியவில்லை. அதனால், அவர் என்னைவிட்டுப் பிரிந்தது போன்று இருக்கக் கூடாது. என்னுடையே இருப்பது போன்ற எண்ணம் வர வேண்டும் என்பதற்காக இந்த சிலை அமைத்துள்ளேன். சிலிக்கான் மற்றும் ரப்பர் பொருட்களால் என் மனைவியின் சிலை தயாரிக்கப்பட்டதால் அது உயிரோட்ட உள்ளதாக அமைந்துள்ளது,’’ என்றார்.

மூலக்கதை