வெள்ளை மாளிகை வளாகத்தில் துப்பாக்கி மனிதன் பேட்டியை நிறுத்தி விட்டு ஓடிய டிரம்ப்: கொஞ்சம் நேரம் பரபரப்பு; பிறகு கலகலப்பு

தினகரன்  தினகரன்
வெள்ளை மாளிகை வளாகத்தில் துப்பாக்கி மனிதன் பேட்டியை நிறுத்தி விட்டு ஓடிய டிரம்ப்: கொஞ்சம் நேரம் பரபரப்பு; பிறகு கலகலப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தந்து கொண்டிருந்த சமயத்தில், வெள்ளை மாளிகை வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் மீது பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வழக்கம் போல் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அவர் பேட்டியை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் அவசரமாக குறுக்கிட்டு, டிரம்ப் காதில் ஏதோ கூற, அவர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார். அங்கிருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அதிபர் டிரம்ப், ‘‘சிறிது நேரத்திற்கு முன் வெள்ளை மாளிகை வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதனால்தான் உடனடியாக எனது அலுவலகம் வரை சென்றிருந்தேன். துப்பாக்கியுடன் நுழைந்த தனிநபர் காயமடைந்துள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்,’’ என கூறினார்.இது அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. 51 வயது நபர் ஒருவர் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு வீரரிடம் வந்து தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக கூறி உள்ளார். பின்னர் அந்த நபர் சிறிது தூரம் சென்று அங்கிருந்து பாதுகாப்பு வீரரை நோக்கி ஓடி வந்துள்ளார். அதோடு, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துள்ளார். இதனால், உடனடியாக பாதுகாப்பு வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த நபர் காயமடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக துப்பாக்கியுடன் வெள்ளை மாளிகைக்கு வந்தார் என்ற தகவல்கள் உறுதிபடுத்தப்படவில்லை. * பயமா...எனக்கா...துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து டிரம்ப் கூறியதும், பத்திரிகையாளர்கள், ‘‘துப்பாக்கிச்சூடு நடந்ததால் பயந்து விட்டீர்களா?’’ என கேள்வி கேட்டனர். அதற்கு டிரம்ப், ‘‘நிச்சயம் இல்லை. என்னைப் பார்த்தால் பயந்த மாதிரியா தெரிகிறது?’’ என சிரித்தபடியே கேட்டு தனது பேட்டியை தொடர்ந்தார்.

மூலக்கதை