சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை
திருவனந்தபுரம்: சபரிமலையில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். நாட்டில் விவசாயம் செழித்து, மக்களின் வறுமை நீங்க வேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு நிறைபுத்தரிசி பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5.50 - 6.20 மணிக்கு இடையே தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தந்திரிக்கு தடங்கல்: தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் வீடு செங்கனூரில் உள்ளது. அங்கிருந்து காரில் சபரிமலைக்கு புறப்பட்டார். கனமழையால் பம்பைக்கு 12 கிலோ மீட்டர் தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் மூடப்பட்டு இருந்தது. தந்திரி நடந்தே பம்பை வர தீர்மானித்தார்.தகவல் அறிந்த பம்பை போலீசார் சம்பவ இடம் சென்று தங்கள் வாகனத்தில் தந்திரியை அழைத்து வந்தனர். கடந்த 2018ம் ஆண்டு இதைபோல் நிறைபுத்தரிசி பூஜைக்கு தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் செல்லும் போதும் பம்மை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புலிமேடு வழியாக நடந்தே சன்னிதானம் சென்றார்.