மருமகனின் சித்ரவதையால் கொடூரம் தந்தை தூக்கில் தொங்கினார் மகள்கள் ரயிலில் பாய்ந்தனர்: ஆந்திராவில் நடந்த பாசப் போராட்ட பயங்கரம்

தினகரன்  தினகரன்
மருமகனின் சித்ரவதையால் கொடூரம் தந்தை தூக்கில் தொங்கினார் மகள்கள் ரயிலில் பாய்ந்தனர்: ஆந்திராவில் நடந்த பாசப் போராட்ட பயங்கரம்

திருமலை: மகளை மருமகன் சித்ரவதை செய்ததால் மனமுடைந்த தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அதிர்ச்சியில், அவரது 2 மகள்களும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பொதட்டூரை சேர்ந்தவர் பாபு, எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர். இவரது மகள்கள் ஸ்வேதா (26), சாயி (20). சில மாதங்களுக்கு முன் ஸ்வேதாவிற்கு திருமணம் ஆனது. சாயி இன்ஜினியரிங் படித்து வந்தார்.இந்நிலையில், திருமணம் ஆன சில மாதங்களில் இருந்தே ஸ்வேதாவிற்கும், அவரது கணவர் சுரேஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சுரேஷ் குமார், தினமும் ஸ்வேதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். கணவரின் சித்ரவதையால் வேதனையடைந்த ஸ்வேதா, தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதனால் பாபு, சுரேஷ் குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகும் கூட சித்ரவதை செய்து வந்துள்ளார். பாசத்தோடு வளர்த்த மகளின் நிலை கண்டு வேதனையடைந்த பாபு, நேற்று முன்தினம் தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, சாயி ஆகிய இருவரும் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு சென்று, அவ்வழியாக சென்ற சரக்கு ரயி ல்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து தகவலறிந்த பொதட்டூர் போலீசார், மற்றும் கடப்பா ரயில்வே போலீசார், சடலங்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து ஸ்வேதாவின் கணவனான சுரேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் சித்ரவதை அனுபவிப்பதை தாங்க முடியாமல் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதும், தந்தை இறந்த அதிர்ச்சியில் அவரது 2 மகள்கள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.* உருக்கமான வீடியோபாபு தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். அதில், ‘எனது 2 மகள்களையும் நான் மிகவும் பாசத்துடன் வளர்த்தேன். முதல் மகளான ஸ்வேதாவை நன்கு படிக்க வைத்து என் வசதியை மீறி செலவு செய்து திருமணம் செய்து வைத்தேன். ஆனால், அவளின் கணவன் சுரேஷ் குமார் தினமும் சித்ரவதை செய்கிறான். இதையறிந்து நான் அவனிடம் கெஞ்சி கேட்ட போதும் திருந்தவில்லை. வேலைக்கு செல்லாத அவன் ஸ்வேதாவிற்கு கொடுத்த பணம், நகை எல்லாவற்றையும் விற்று மது குடித்து வீணாக செலவழித்துள்ளான். எனது தற்கொலைக்கு அவன்தான் காரணம். அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை