பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதை நிறுத்திய சவுதி அரேபியா..!
இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதை சவுதி அரேபிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா 6.2 பில்லியன் கடனுதவி அளித்திருந்தது. கடன் தொகுப்பில் பாகிஸ்தானுக்கு ஒரு வருட அவகாசத்தில் திருப்பி செலுத்தும் வகையில்,ம் 3.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயையும் வழங்கியது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கான கடன் அளிப்பதற்கான ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்கு முன் காலாவதியான நிலையில், சவுதி அரேபிய அரசு அதனை புதுப்பிக்கவில்லை என பாக்.,ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக, ஒரு பில்லியன் டாலர் கடனை, குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே, அதாவது 4 மாதங்களுக்கு பாக்.,திருப்பி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு, காஷ்மீரில் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டவில்லை என்றால், பிரதமர் இம்ரான் கான் தனது சக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுடன் அதை நடத்துவார் .உங்களால் அதைக் கூட்ட முடியாவிட்டால், காஷ்மீர் பிரச்சினையில் எங்களுடன் நிற்க தயாராக இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை அழைக்குமாறு பிரதமர் இம்ரான் கானைக் கேட்க நான் கட்டாயப்படுத்தப்படுவேன் என மிரட்டல் தொனியில் கூறியிருந்தார்.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான காஷ்மீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்க வேண்டுமென்ற பாகிஸ்தானின் கோரிக்கையை இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு பல முறை நிராகரித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக பாக்., விஷம பிரசாரம் செய்து வருகிறது. மேலும் துருக்கி அதிபர் எர்டோகனுடன் , பாக்.,பிரதமர் இம்ரான் கான் நெருக்கம் காட்டி வருவதும் சவுதி அரேபியாவின் நிராகரிப்புக்கு மற்றுமொரு முக்கிய காரணமென கூறப்படுகிறது.