தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின

தமிழ் முரசு  தமிழ் முரசு
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின

சென்னை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து  சென்னையின் முக்கிய சாலைகள் உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வந்து சாலைகளில் நடந்தும் வாகனங்களிலும் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

விதி மீறியதற்காக அபராதமும் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 6 கட்டங்களாக ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே  தான் இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 2,90,907 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2,32,618 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4,808 பேர் உயிரிழந்துள்ளனர்.



சென்னையில் 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 94,100 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

2,290 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று அதிகமானதையடுத்து ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும் ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி கடந்த  2ம் தேதி  ஆகஸ்ட் மாதத்திற்கான முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையான இன்றும்  தமிழகம் முழுவதும்  தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் வருகிற 16, 23, 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி  தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.



ஏற்கனவே ஜூலை மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமையும், ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 2ம் தேதியும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 6வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேரத்தில் தளர்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி இல்லாததால் அனைத்து கடைகளும் மூடப்பட்டது.

பால் மற்றும் மருந்து கடைகள், பத்திரிகை விற்பனையகம் மட்டும் வழக்கம் போல் இயங்கியது. மேலும் அரசு அனுமதி அளித்துள்ள வாகனங்கள் மற்றும் பால் மற்றும் மருத்துவ பணிகள் சார்ந்த வாகனங்கள் மட்டும் சாலைகளில் ஓடியது.   இதனால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் மருந்து கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ தேவைக்கு தவிர யாரும் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்து இருந்தனர்.

அதையும் மீறி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் நடந்தும் வாகனங்களிலும் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

விதி மீறியதற்காக அபராதமும் விதிக்கப்பட்டது. சென்னையின் முக்கிய சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற முக்கியமான சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த முக்கிய சாலைகளை இணைக்கும் சாலைகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். “ட்ரோன்” காமிரா மூலம் அனைத்து தெருக்களையும் தொடர்ந்து கண்காணித்தனர்.

வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு

மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை நாளை முதல் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதைப்போன்று தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும்  செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 10 ஆயிரத்துக்கும்  அதிகமான வருமானம் வருவதுடன் அதிக மக்கள் வரும்  பெரிய கோயில்கள், தேவலாயங்கள், மசூதிகள் திறக்க அனுமதி இல்லை.  

.

மூலக்கதை