கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்

தினகரன்  தினகரன்
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்

மாஸ்கோ: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்துக்குப் பயணிகளுடன் வந்த விமானம், நேற்று இரவு தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில், 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகள், 4 விமானப் பணிப்பெண்கள், 2 விமானிகள் என 190 பேர் பயணித்தனர். கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, விமானியின் கட்டுப்பாட்டை மீறி ஓடு பாதையிலிருந்து விலகி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விமானம் இரண்டாகப் பிளந்தது. இந்த விமான விபத்தில் இரு விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 149 பேர் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 22 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு புதின் கடிதம் எழுதி உள்ளார்.

மூலக்கதை