சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய தகவல்
பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.. இருந்தாலும் அவரது மன அழுத்தத்திற்கு காரணமானவர்கள் யார், அவரை தற்கொலை செய்துள்ள தூண்டியவர்கள் யார் என ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான காரணங்களை கூறி வருகிறார்கள்.. அவரது முன்னாள் காதலி ரியா சக்கரபோர்த்தியை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட்டை சேர்ந்த இயக்குனர் குஷால் ஜவேரி என்பவர் தற்போது சுஷாந்த் மரணம் குறித்து ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இவர் சுஷாந்த் நடித்து கடந்த 2014ல் ஒரு தனியார் சேனலில் ஒளிபரப்பான பவித்ரா ரிஷ்டா என்கிற தொடரை இயக்கிய இயக்குனர்களில் ஒருவர்..
தற்போது இவர் கூறியுள்ளதாவது : “சுஷாந்த்துடன் கடந்த 2018 ஜூலையில் இருந்து 2019 பிப்ரவரி வரை தங்கி இருந்தேன். மீ டூ குற்றச்சாட்டுகள் பிரபலமாக தொடங்கிய அந்த சமயத்தில் தில்பேச்சாரா படத்தில் தன்னுடன் நடித்த சஞ்சனா சங்கி என்கிற நடிகையிடம் சுஷாந்த் தவறாக நடந்துகொண்டார் என சில மீடியாக்கள் எந்தவித ஆதாரமும் இன்றி செய்தி வெளியிட்டதால் அதிர்ந்துபோனார் சுஷாந்த். நடிகை சஞ்சனா சங்கியை தொடர்புகொண்டு பேச முயற்சித்தோம்.. ஆனால் வெளிநாட்டில் அவர் இருந்ததால் துரதிர்ஷ்டவசமாக அவரை நான்கு நாட்களுக்கு எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. சுஷாந்த் அந்த நான்கு நாட்களும் தூங்கவே இல்லை..
இப்படி செய்திகள் வெளியிட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தனக்கு தெரிந்தாலும் அதை நிரூபிப்பதற்கான ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லையென சுஷாந்த் புலம்பிக்கொண்டிருந்தார்.. நல்லவேளையாக ஐந்தாம் நாள் சம்பந்தப்பட்ட சஞ்சனா சங்கியே சுஷாந்த் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என உண்மையை மீடியாக்களின் முன் உடைத்தார். உண்மையிலேயே ஏதோ போர் முடிந்து அதில் வெற்றிபெற்றது போல அந்த சூழல் இருந்தது. ஒருவேளை அப்போது சுஷாந்துக்கு எதிராக இப்படி தவறான செய்திகளை கிளப்பி விட்டவர்கள் தான், இப்போது அவரது தற்கொலைக்கும் காரணமாக அமைந்திருக்க கூடும்.. போலீஸார் அதையும் விசாரிக்க வேண்டும்” என கூறியுள்ளார் குஷால் ஜவேரி.