இங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020
மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326, இங்கிலாந்து 219 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்திருந்தது. யாசிர் ஷா (12), முகமது அபாஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 45வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த யாசிர் ஷா (33), ஸ்டூவர்ட் பிராட் ‘வேகத்தில்’ வெளியேறினார். ஆர்ச்சர் பந்தில் நசீம் ஷா (4) போல்டானார். இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 169 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. முகமது அபாஸ் (3) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பிராட் 3, வோக்ஸ், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
கடின இலக்கு: பின், 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை துவக்கியது. முகமது அபாஸ் பந்தில் ரோரி பர்ன்ஸ் (10) அவுட்டானார்.
உணவு இடைவேளையின் போது 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து, 222 ரன்கள் பின்தங்கி இருந்தது. சிப்லே (26), கேப்டன் ஜோ ரூட் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.