சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் ?
இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் சல்மான் கான், ஆமீர்கான், அக்ஷய்குமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார்கள்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமா நடிகரான ரஜினிகாந்த்தான் அதிக சம்பளம் வாங்குவதாக இதுவரை சொல்லி வந்தார்கள். ரஜினிகாந்த் அதிகபட்சமாக 60 அல்லது 70 கோடி வரை வாங்குவதாகத்தான் தகவல்.
ஆனால், 'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் சம்பளம் 80 கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது. இருப்பினும் அது உறுதியான தகவலா என்று தெரியவில்லை. அப்படம் விஜய்யின் உறவினர் தயாரிக்கும் படம் என்பதால் அப்படி ஒரு கணக்கைக் காட்டுகிறார்கள் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். இன்னமும் ரஜினிகாந்த் சம்பளத்தை விஜய் கடக்கவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.
இதனிடையே, 'பாகுபலி' நடிகரான பிரபாஸ் 'மகாநடி' இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ள அவருடைய 21வது படத்திற்கு சுமார் 70 கோடி வரை சம்பளமாகக் கேட்டுள்ளதாக டோலிவுட்டில் சொல்கிறார்கள். மேலும், தென்னிந்திய மொழிகளில் படத்தை டப்பிங் செய்து விற்கும் உரிமையிலும் அவருக்குப் பாதி கொடுத்துவிட வேண்டுமாம். அதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் 100 கோடி தாண்டும் என்கிறார்கள்.
இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே சுமார் 20 கோடி வரை கேட்டுள்ளதாகத் தகவல். அதே சமயம் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் கேட்ட 5 கோடி ரூபாய் சம்பளத்தைக் கூட படக்குழு யோசிப்பதாக ஒரு தகவல் வெளியானது. படத்தின் பட்ஜெட் மட்டுமே 400 கோடி ரூபாயாம். அதில் சம்பளமாகவே 200 கோடி வரை போய்விடும். இதெல்லாம் படத்திற்காக வேண்டுமென்றே அள்ளிவிடுகிற 'பில்ட்அப்'பாக இருக்கும் என்று கூட ஒரு பேச்சு அடிபடுகிறது. சினிமாவில் எதையும் இப்படி டபுளாகப் பேசுவது வழக்கம்தான்.