கொரோனா பரவும் இந்த வேளையில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சாத்விக் உணவுகள் உண்ண வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

தினகரன்  தினகரன்
கொரோனா பரவும் இந்த வேளையில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சாத்விக் உணவுகள் உண்ண வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: உடல் ஆரோக்கியமாக இருக்க அனைவரும் சாத்விக் வகை உணவுகளை உண்ண வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவால் உலகமே சிக்கித் திணறி வருகிறது. இதில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை சற்றுப் பரவாயில்லை. இந்தியர்களின் உடல்களில் இயற்கையிலேயே உள்ள எதிர்ப்பு சக்தியால் கொரோனாவிலிருந்து ஏராளமானோர் எளிதில் மீண்டு விடுகின்றனர். இதற்கு நாம் பயன்படுத்தும் சத்து நிறைந்த பாரம்பரிய உணவு வகைகளே காரணம். அந்த வகையில் அனைவரும் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ, சாத்விக் வகை உணவுகளை உண்ண வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், \'சாத்விக்\' வகை உணவை உட்கொள்ள மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார். பாலம்பூர், மைசூரு, லக்னோ மற்றும் மொஹாலி ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவு, அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தால், வரும் காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை விளையும் என்றும் அவர் குறிப்பிட்டார். உணவுகளில் சாத்விக், ராஜசிக் மற்றும் தமாசிக் என்ற 3 வகை உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகிறது. தூய்மையான, காய்கறி, பழங்கள் போன்ற இயற்கையான மற்றும் சுத்தமான உணவுகள் சாத்விக் வகையாகும். காரமான உணவு ராஜசிக் பிரிவிலும், அசைவ உணவுகள் தமாசிக் பிரிவிலும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை