பாலிவுட் படத்தில் தலைவாசல் விஜய்: லண்டன் பறந்தார்

தினமலர்  தினமலர்
பாலிவுட் படத்தில் தலைவாசல் விஜய்: லண்டன் பறந்தார்

தமிழில் தலைவாசல் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் விஜய். படத்தின் பெயரையும் சேர்த்துக் கொண்டு தலைவாசல் விஜய் ஆனார். அதன்பிறகு குணசித்ர நடிகராக தேவர் மகன், திருடா திருடா, காதல் கோட்டை உள்பட பல படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் யுகபுருஷன் என்ற படத்தில் ஸ்ரீ நாராயண குருவாக நடித்து அந்த மாநில அரசின் விருதை பெற்றார். கடந்த ஆண்டு பாலிவுட்டில் கால் பதித்தார். வித்யூத் ஜமால் நடித்த ஜங்கிள் படத்தில் நடித்தார். தற்போது அக்ஷய் குமார், ஹீமா குரோஷி நடிக்கும் பெல்பாட்டம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது. இதற்காக அக்ஷய்குமார் தலைமையில் படக்குழுவினர் தனி விமானத்தில் லண்டன் சென்றனர். அவர்களுடன் தலைவாசல் விஜய்யும் சென்றுள்ளார். கொரோனா பாதுகாப்பு உடையுடன் தான் பயணம் செய்யும் படத்தை வெளியிட்டு தலைவாசல் விஜய் கூறியிருப்பதாவது:

கொரோனா காலகட்டத்தில் இது போன்று பயணிப்பது ஒரு த்ரில்லிங்கான அனுபவம். மொத்த விமான நிலையம் ஒரு பயோ வார் பகுதி போலவே காட்சியளித்தது. அனைவரும் கவச உடைகள், கண்ணாடிகள், முகத்தை மறைக்கும் ஷீல்டு உள்ளிட்டவைகளை அணிந்து இருந்தார்கள். முன்பு இருந்ததை போல எங்களை வரவேற்க ஒருவரும் இருக்கவில்லை. நாங்களே எங்களுடைய உடைமைகளை எடுத்து சென்றோம். அனைத்து வேலைகளையும் நாங்களே செய்தோம்.

படக் குழுவினரை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக அனைத்து விஷயங்களையும் தயாரிப்பாளர் செய்திருந்தார். நாங்கள் ஷுட்டிங் துவங்குவதற்கு முன்பாக கட்டாய தனிமைப்படுத்துதல் செய்து கொள்ள உள்ளோம். மேலும் ஷுட்டிங் நடக்கும் இடத்தில் ஒரு டாக்டர் கண்டிப்பாக எப்போதும் இருப்பார். பெல்பாட்டம் படம், எனக்கு ஹிந்தியில் நல்ல இமேஜை பெற்றுத்தரும்.

இவ்வாறு தலைவாசல் விஜய் கூறியிருக்கிறார்.

மூலக்கதை