மாணவர்களுடன் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடல்
புதுடில்லி: 'துாய்மை இந்தியா' திட்டம் குறித்து, நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்களுடன், பிரதமர் மோடி இன்று(ஆக.,8) கலந்துரையாடுகிறார்.
மகாத்மா காந்தியின், 'துாய்மையான இந்தியா' எனும் கனவை நிறைவேற்றும் வகையில், கடந்த, 2014-, அக்டோபர், 2ல், துாய்மை இந்தியா' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், நாட்டில், 55 கோடிக்கும் அதிகமான மக்கள், திறந்த வெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கும் போக்கை விடுத்து, கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்காக, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
இந்நிலையில், துாய்மை இந்தியா திட்டம், இப்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இந்த திட்டம் பற்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். அதற்கு முன், 'ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா' எனப்படும், தேசிய தூய்மை மையத்தை, டில்லியில், காந்தி சமாதி உள்ள ராஜ்காட்டில், பிரதமர் துவக்கி வைக்கிறார்.