கேரளத்தில் விமானம் இரண்டாக பிளந்த விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு; பைலட் உட்பட 18 பேர் பலி.!!!

தினகரன்  தினகரன்
கேரளத்தில் விமானம் இரண்டாக பிளந்த விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு; பைலட் உட்பட 18 பேர் பலி.!!!

திருவனந்தபுரம்: கேரள விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. துபாயில் இருந்து வந்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு 7.40 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்தது.  விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகள், 2 பைலட் உட்பட 6 ஊழியர்கள் என 190 பேர் இருந்தனர். அப்போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. பைலட் மிகவும் சிரமப்பட்டு விமானத்தை தரையிறக்கினார். ஓடுபாதையில்  விமானம் நிற்க வேண்டிய நிலையில் வந்தபோது திடீர் என்று பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி சென்று சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. பின்னர், 35 அடி பள்ளத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில், விமானிகள்  அறையில் இருந்து விமானத்தின் முன்பக்க வாசல் வரையிலான பகுதிவரை இரண்டாக பிளந்தது.அதிர்ஷ்டவசமாக விமானம் தீ பிடிக்கவில்லை. இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. காயமடைந்த விமான பயணிகள் அலறி அழுதனர். உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள்  அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. விமானி மற்றும் ராஜீவ், சர்புதீன் உட்பட 20 பயணிகள் இறந்துள்ளனர். மேலும், பலர்  காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழைதான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விமான நிலையம் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. இது, ‘டேபிள் டாப்’ விமான நிலையம்  என்று அழைக்கப்படுகிறது. இதேபோல், மங்களூரு விமான நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விமான விபத்தில் பலர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை