செய்தி சில வரிகளில்......
உடலை வெட்டி பதுக்கிய மனைவி
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உக்ரைனைச் சேர்ந்த, பிரபல பாடகர், அலெக்சாண்டர் யுஷ்கோ திடீரென மாயமானதாக, அவரது மனைவி மரினா குக்கல் தெரிவித்தார்.போலீஸ் விசாரணையில், கணவர் அதிக போதை மருந்து சாப்பிட்டதால் இறந்ததாகவும், அவர் ரசிகர்கள் தன்னை தாக்கக் கூடாது என்பதற்காக, மாயமானதாக கூறியதாகவும் தெரிவித்தார்.மேலும் துருவிய போது, மரினா, தன் கணவர் உடலை மறைக்க, துண்டு துண்டாக வெட்டி, ரெப்ரிஜிரேட்டரில் வைத்துள்ளதாக கூறியதைக் கேட்டு, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் வீட்டை சோதனையிட்டு, உடற் பாகங்களை கைப்பற்றினர்.எனினும், குடல் உள்ளிட்ட சில உறுப்புகளை காணவில்லை. மரினா, கணவரை கொலை செய்திருக்கலாம் என்ற போதிலும், ஆதாரம் இல்லாமல் அதை நிரூபிப்பது கடினம் என, போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அலெக்சாண்டர் யுஷ்கோ மறைவால், அவர் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
போலந்து அதிபராக ஆன்ட்ரஜ் துடா பதவியேற்பு
வார்சா: போலந்து அதிபராக, ஆன்ட்ரஜ் துடா, இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்க அவர் அதிபராக நீடிப்பார். கடந்த ஆட்சியில் அவரது கொள்கைகளால், ஐரோப்பிய கூட்டமைப்புடன் மோதல் ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த எதிர்கட்சியை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.,க்கள், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.