ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: தலித் குடும்பத்துக்கு முதல் பிரசாதம்

தினமலர்  தினமலர்
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: தலித் குடும்பத்துக்கு முதல் பிரசாதம்

அயோத்தி: அயோத்தியில் நடந்த ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா முடிந்த பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. லட்டு, துளசிதாசர் எழுதிய, 'ராமசரிதமானஸ்' புத்தகம், துளசி மாலை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில், முதல் பிரசாதம், அயோத்தியில் வசிக்கும் மஹாவீர் என்ற தலித் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, தேர்தல் ஆணையம், 72 மணி நேர தடை விதித்தது. அப்போது, அயோத்தியில் மஹாவீர் வீட்டில் தான், யோகி ஆதித்யநாத் தங்கி, உணவு சாப்பிட்டார். இதை மனதில் கொண்டே, மஹாவீருக்கு முதல் பிரசாதத்தை ஆதித்யநாத் வழங்கியுள்ளார்.

இது பற்றி மஹாவீர் கூறுகையில், ''அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது. முதல் பிரசாதம் எங்களுக்கு கிடைத்தது, பெரு மகிழ்ச்சியாக உள்ளது. ''என்னை நினைவில் வைத்து, முதல் பிரசாதத்தை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மாநிலத்தில், ஜாதி வேறுபாடுகள், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மறையும்,'' என்றார்.

மூலக்கதை