பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்

தினமலர்  தினமலர்
பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்

இஸ்தான்பூல்: பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்களை கண்டித்து துருக்கியில் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டங்களை கடுமையாக்கும் படி வலியுறுத்தப்பட்டது.

துருக்கியில் பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டவும் புதிய சட்டங்களை கடந்த 2011ம் ஆண்டு அந்நாட்டு அரசு கொண்டு வந்தது. இதற்கு பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அச்சட்டங்களை ரத்து செய்வது குறித்து அதிபர் எர்டோகன் ஆலோசித்து வந்தார்.



இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்களை வலியுறுத்தி நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் பைனர் குல்டெகின் என்ற கல்லூரி மாணவி அவருடைய காதலனால் எரித்து கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு மட்டும் அந்நாட்டில் 474 பெண்கள் வன்முறை சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் கணவன்மார்களாலும், குடும்ப உறுப்பினர்களாலும், ஒருதலைக் காதலாலும் கொல்லப்பட்டனர்.


இது குறித்து பெண்கள் உரிமைக்களுக்கான ஆர்வலர் அன்னா பிளஸ் கூறியதாவது, ' துருக்கி அரசு அதிகாரிகள் பெண்களுக்கான பாதுகாப்பபு சட்டங்களை திரும்பப் பெறுவது மிகவும் தவறான விஷயம். கொரோனா ஊரடங்கின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை