விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்தவரை வெளுத்து வாங்கிய சக பயணிகள்

தினமலர்  தினமலர்
விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்தவரை வெளுத்து வாங்கிய சக பயணிகள்

ஆம்ஸ்டர்டேம்: நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான ஐபிசா தீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்றில் முகக்கவசம் அணிய மறுத்த இரண்டு பேரை சக பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச விமானப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இருப்பினும் சில நாடுகள் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன. சிறப்பு விமானங்களில் பயணம் செய்பவர்கள் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயினின் ஐபிசா தீவுக்கு கே.எல்.எம் என்ற சர்வதேச விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

விமானத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறியும் இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு நபர்கள் மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளனர். சக பயணிகள் அவர்களை முகக்கவசம் அணியுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதில் மது அருந்தியிருந்த ஒரு நபர், முகக்கவசத்தை அணிய மறுத்தது மட்டுமல்லாமல் சக பயணிகளை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். நடுவானில் விமானத்தில் நடந்த சண்டைக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தரையிறங்கியதும் முகக்கவசம் அணிய மறுத்த பயணிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மூலக்கதை