ஜாதவ் வழக்கில் 3 வழக்கறிஞர்கள்'அமிகஸ் கியூரி'யாக நியமனம்

தினமலர்  தினமலர்
ஜாதவ் வழக்கில் 3 வழக்கறிஞர்கள்அமிகஸ் கியூரியாக நியமனம்

இஸ்லாமாபாத் :குல்பூஷன் ஜாதவ் வழக்கில் தங்களுக்கு உதவ, மூன்று வழக்கறிஞர்களை, 'அமிகஸ் கியூரி' யாக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.இந்த தீர்ப்புக்கு, சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, ஜாதவுக்கு அனுமதி அளிக்கும் படியும், சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், ஜாதவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் துவங்கியது, அப்போது நடந்த விசாரணையில், ஜாதவ் சார்பில் வாதாடுவதற்கு வழக்கறிஞரை நியமிக்க, இந்தியாவுக்கு அனுமதி அளித்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



இந்நிலையில், ஜாதவ் வழக்கில் தங்களுக்கு உதவி செய்ய, மூன்று வழக்கறிஞர்களை, அமிகஸ் கியூரி யாக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று நியமித்தது.மூத்த வழக்கறிஞர்களான அபித் ஹாசன் மன்ட்ரோ, மக்துாம் அலிகான், ஹமீத் கான் ஆகியோரை அமிகஸ் கியூரியாக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதர் மினல்லா, நீதிபதி மிரன்குல் ஹாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு நியமித்துள்ளது.

மூலக்கதை