கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதி தற்கொலை!: ஊர் மக்கள் பேசாமல் ஒதுக்கியதால் விபரீதம்..ஆந்திராவில் துயரம்..!!

தினகரன்  தினகரன்
கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதி தற்கொலை!: ஊர் மக்கள் பேசாமல் ஒதுக்கியதால் விபரீதம்..ஆந்திராவில் துயரம்..!!

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஊர் மக்கள் ஒதுக்கி வைத்ததால் கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மவரத்தை சேர்ந்த பெனிராஜ், ஸ்ரீஷா தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்டவர்களாவார்கள். பெனிராஜ் வெள்ளம் வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். சில வாரங்களுக்கு முன்பு தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பெனிராஜ் தாயார் கொரோனாவால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து எடுத்த பரிசோதனை முடிவில் கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு வாரத்திற்கு முன்பு வீடு திரும்பினர். அதன்பின்னர் மீண்டும் கடைக்கு சென்றார். ஆனால் அக்கம்பக்கத்து வியாபாரிகள் மற்றும் அவரது வீட்டின் அருகில் இருந்தவர்கள் அவர்களிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் யாரும் கடைக்கு வரவில்லை. தொடர்ந்து, கடன் கொடுத்தவர்களும் கடனை கேட்டு தொல்லை அளித்து வந்தனர். இதனால் மனமுடைந்த பெனிராஜ், ஸ்ரீஷா தம்பதியினர் தங்கள் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டனர். கொரோனாவில் இருந்து மீண்டும் ஊர்மக்கள் ஒதுக்கி வைத்ததால் தம்பதி உயிரை மாய்த்துக் கொண்டது ஆந்திர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மூலக்கதை