மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

சென்னை: மத்திய பாஜ அரசின் தேசிய கல்வி கொள்கை -2020ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மு. க. ஸ்டாலின், கி. வீரமணி, கே. எஸ். அழகிரி, வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், ரவி பச்சமுத்து ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கு எதிராகவும், தமிழகத்தில் அண்ணாவால்  அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் இருமொழி கொள்கையை நிராகரித்து, மும்மொழி கல்வித்திட்டத்தை முன்னிறுத்தும் வகையிலும் அமைந்துள்ள ‘தேசிய கல்வி கொள்கை-2020’க்கு எவ்வித மறு சிந்தனையுமின்றி, கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.

கொரோனா பேரிடர் வாட்டி அச்சுறுத்தி வரும் வேளையில், தேசிய கல்வி கொள்கைக்கு பாஜ அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதில் இருந்தே, அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளலாம். 2016-ல் தொடங்கி டிஎஸ்ஆர் சுப்பிரமணியம் குழு, கஸ்தூரி ரங்கன் குழு என்றெல்லாம் அமைத்து உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய கல்வி கொள்கை, கல்வியில் மதச்சாயம் பூசி, வணிகமயப்படுத்தி சமஸ்கிருதம், இந்திக்கு முக்கியத்துவம் அளித்து கூட்டாட்சி தத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமை, சமத்துவம், சம வாய்ப்பு, பன்முகத்தன்மை ஆகிய அனைத்திற்கும் விரோதமாக அமைந்திருக்கிறது.
66 பக்கங்கள் கொண்ட ‘தேசிய கல்வி கொள்கை 2020’-ன் முகவுரையின் பக்கம் 5ல் ‘கற்பித்தலிலும், கற்பதிலும் பன்மொழியையும், மொழி திறனையும் ஊக்குவிப்பதுதான் கல்வி கொள்கையின் அடிப்படை தத்துவம்’ என்று கூறியிருப்பதற்கு மாறாக, மீதியுள்ள அனைத்து பக்கங்களிலும் நம் தமிழ்மொழிக்கு எதிரான எண்ணவோட்டமே பிரதிபலிக்கிறது.

உதாரணமாக, பத்தி 4. 11-ல், ‘எங்கெல்லாம் முடிகிறதோ’ 5ம் வகுப்பு வரையாவது பயிற்றுமொழி தாய்மொழி யாக இருக்க வேண்டும்’ என்பதும், “முடிந்தால் 8ம் வகுப்பு வரையிலும் தொடரலாம்’ என்பதும் மத்திய அரசுக்கு மும்மொழித்திட்டத்தின் மீது இருக்கும் ஆர்வத்தையே அதிகம் வெளிப்படுத்துகிறது.

அதே பத்தியில் ‘ஒரு மொழியை கற்பிக்கவும், கற்று கொள்ளவும் அந்த மொழி பயிற்றுமொழியாக இருக்க வேண்டியதில்லை’ என்று கூறுவதிலிருந்து, எப்பாடு பட்டாவாது இந்தி மொழியை திணித்து விட வேண்டும் என்பதில் பாஜ அரசு முனைப்புடன் செயல்படுவதாகவே தெரிகிறது. தமிழகத்தில் இருமொழி கொள்கைக்கும், 1 முதல் 10ம் வகுப்புவரை தமிழ்மொழி பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ள 2006ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது.

பத்தி 4. 17-ல், ‘பள்ளி முதல் உயர் கல்வி வரை அனைத்து மட்டங்களிலும்-அறிவை பெற மிக முக்கியமானதாக கருதி - சமஸ்கிருதம் கற்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மும்மொழி திட்டத்தில் ஒன்றாக சமஸ்கிருதத்திற்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’ என்பது இருமொழி கொள்கையை அடியோடு புறக்கணித்து, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்கும் பகிரங்க முயற்சியாகும்.

ஆனால் தமிழக மக்கள் அதிர்ச்சியடையும் வகையில், அடுத்த பாரா 4. 18-ல், “தமிழ் இலக்கியத்தை பாதுகாத்து வைக்கலாம்; இந்தியா முழுமையாக வளர்ச்சி பெற்ற பிறகு நாளைய தலைமுறை அந்த மொழி பற்றி பிற்காலத்தில் அறிவு பெற உதவும்” என்று கூறியிருப்பது தமிழ்மொழியை, தமிழர்களை ஏன், தமிழகத்தையே நாக்கில் தேன் தடவி ஏமாற்றும் அடாவடி செயல்.

செம்மொழியாம் தமிழ்மொழியை, தேசிய கல்வி கொள்கையில் இவ்வாறு சிறுமைப்படுத்தி - சமஸ்கிருதத்தை திணித்திடும் உள்நோக்கில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய கல்வி கொள்கை, தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறையில் இருந்து வரும் கல்வி முறையை சிதைத்து பின்னடைவை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

அதில் மேலும் தமிழக கல்விக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்கள் இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதாவது, கல்வியில் வேத கலாச்சாரத்தை திணிப்பது, இடஒதுக்கீடு குறித்து எதுவும் சொல்லாமல் சமூகநீதியை புறக்கணிப்பது, பெண் கல்வி குறித்து கவலைப்படாது - பெண்ணுரிமையை காவு கொடுத்திருப்பது, 3 வயது குழந்தையை முறைசார்ந்த பள்ளியில் சேர்த்து குழந்தைகளின் உரிமையை பறிப்பது, தொழில் கல்வி என்ற பெயரால், தமிழகத்தில் பல்லாண்டுகளுக்கு  முன்னரே தோல்வி கண்ட குல கல்வியை மீண்டும் அமல்படுத்துவது, மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாற்றியமைப்பது இடம்பெற்றுள்ளது.

மேலும், மாநில அளவில் 3,5,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, 10+2 என்று இருக்கின்ற வெற்றிகரமான ‘பிளஸ் டூ’ கல்வி முறையை 5+3+3+4 என்று மாற்றியமைப்பது, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை பறிக்கும் விதத்திலும், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதத்திலும் உயர் கல்வியை வகுத்திருப்பது இடம்பெற்றுள்ளது. தன்னாட்சியுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது ஆகியவற்றை இப்போது அலட்சியப்படுத்தினால், எதிர்கால தமிழ் சமூகம் தரம் தாழ்ந்து வீழ்ந்து விடும்.

தமிழகத்தில் மும்மொழித்திட்டத்தை திணிப்பதை ஏற்க முடியாது.

மாணவர் சமுதாயத்தை - காவிமய கல்வியின் பக்கமும், பன்முக கலாச்சாரத்திற்கு எதிராகவும் திசை திருப்பும் இந்த கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும், தமிழகத்தில் இருமொழி கொள்கையும் - தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 ஆகியவையே தொடரும் என்றும் பகிரங்கமாக அறிவித்து, அதுதொடர்பாக தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

.

மூலக்கதை