வீட்டில் துப்பாக்கி சூடு - மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் : கங்கனா

தினமலர்  தினமலர்
வீட்டில் துப்பாக்கி சூடு  மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் : கங்கனா

பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகை கங்கனா ரணவத் நேரடியாக பாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை பெயர் சொல்லி குற்றம் சாட்டி வருகிறார். இதனால் சுஷாந்த் தற்கொலை வழக்கில் கங்கனாவும் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது குளுமனாலிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள கங்கனா அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளார். இந்த வீட்டின் மீது கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், 2 முறை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதாகவும், தன்னை மிரட்டுவதற்காகவே சிலர் இப்படி செய்துள்ளதாகவும் பரபரப்பு புகார் கூறியுள்ளார் கங்கனா.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: துப்பாக்கி சூடு நடந்த அன்று நள்ளிரவு எனது அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்கு நேரெதிரில் 2 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 8 விநாடி இடைவெளியில் 2 முறை சுட்டார்கள். அவர்கள் வானத்தை நோக்கி சுட்டிருக்க வேண்டும். அதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. வீட்டுக்கு பின்புறம் காடு இருக்கிறது. அங்கிருந்து காடு வழியாக அவர்கள் தப்பித்து சென்றிருக்கலாம்.

இது எனக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கை என்று நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மகன் குறித்து கருத்து தெரிவித்து இருந்தேன். அதற்கான மிரட்டல் இது. இனி பேசாதே என்பதற்கான எச்சரிக்கை. நான் இப்போது மும்பையில் இல்லை என்பதால், குளுமணாலியில் இந்த மிரட்டலை விடுத்திருக்கிறார்கள். சுஷாந்த் சிங் கூட இப்படித்தான் மிரட்டப்பட்டு பயந்திருக்க வேண்டும். யார் எப்படி என்னை மிரட்டினாலும் சரி, தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பேன். இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கங்கனா போலீசில் புகார் செய்துள்ளார். தற்போது கங்கனா தங்கியிருக்கும் வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

மூலக்கதை