முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்

மாஸ்கோ: உலகத்தில் முதல் நாடாக, கொரோனாவுக்கு எதிரான  தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில்  வெற்றி பெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இன்றைய நிலையில் 1,80,20,684 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,13,30,141 பேர் குணமடைந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,88,913 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,64,318     ஆகவும், பலி எண்ணிக்கை 1,57,898 ஆக உயர்ந்து உள்ளது. இரண்டாம் இடத்தில் பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை 27,08,876 ஆகவும், பலி எண்ணிக்கை 93,616 ஆக உயர்ந்து உள்ளது.

மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனாவால் மொத்தம் 17,50,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,403 பேர் பலியாகி உள்ளனர்.



கடந்த 24 மணி நேரத்தில் 54,735 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 853 பேர் பலியாகி உள்ளனர்.

நான்காமிடத்தில் ரஷியாவில் தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 8,45,443 பேரை தாண்டியும், பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தையும் கடந்திருக்கிறது. இவ்வாறாக உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கொரோனா நோய் தொற்று பரவலால் மக்கள் அவதிக்குள்ளாகி வரும்நிலையில், கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்தது. கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி இந்த சோதனைகள் தொடங்கப்பட்டன.

இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் உலகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்ற ‘முதல் நாடு’ என்ற பெருமை ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளது.



எனினும், இந்த தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகம் முழுவதும் சுமார் 21 தடுப்பூசிகள் தற்போது முக்கியமான சோதனை கட்டத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்தது குறித்து, அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன.

அடுத்து பதிவு செய்வதற்கான ஆவணம் செய்யும் ேவலைகள் நடந்து வருகின்றன. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம்.

கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால், நோயாளிகளுக்கு தடுப்பூசியை அக்டோபரில் போட திட்டமிடுகிறோம்’ என்றார். உலகளவில் தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது சர்வதேச அளவில் பாராட்டை பெற்றுள்ளது.




இந்திய உற்பத்தி திறன் முக்கியம்

அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி ஃபாசி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்பாடு செய்த ஆன்லைன் நிகழ்வில் பேசுகையில், ‘உலகின் முன்னணி தடுப்பூசி தயாரிப்பாளராக இந்தியாவின் தனியார் துறையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் எங்கள் ஆராய்ச்சி முயற்சிகளிலிருந்து பயனுள்ள கொரோனா தடுப்பூசிகள் வெளிவருவதால், இந்த உற்பத்தி திறன் மிகமிக முக்கியமானதாக இருக்கும்’ என்று கூறினார்.

இந்நிகழ்வில் பேசிய மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண், ‘தடுப்பூசி இறுதியாகத் தயாராகும் போது, ​​கொரோனா முன் கள சுகாதார பணியாளர்கள் அதனை முதலில் பயன்படுத்த உரிமை உண்டு’ என்று தெரிவித்தார்.


.

மூலக்கதை