கொரோனாவால் வேலையிழந்தவருக்கு லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

தினமலர்  தினமலர்
கொரோனாவால் வேலையிழந்தவருக்கு லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

பெர்த்: கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவருக்கு 31 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர். அவ்வாறு வேலையிழந்தவர்கள் தற்போதைய சூழலில் புதிதாக வேலைக்கும் செல்ல முடியாமல், தங்களின் வாழ்வாதாரத்திற்கும் வழியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் செக்யூரிட்டி அலுவலராக பணியாற்றிய ஒருவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்தது. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த அவர், தனது 3 வயது மகளுடன் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதேர்ச்சையாக தான் வாங்கிய லாட்டரிக்கு ரூ.31 கோடி பரிசு விழுந்ததால் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.

இது குறித்து அந்த நபர் கூறியதாவது: வாழ்க்கை என்பது ஒரு கனவு என்பதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. உடனடியாக வீட்டிற்கு சென்று எனது மகளை கட்டி அணைத்துக் கொஞ்ச விரும்புகிறேன். லாட்டரியில் பரிசு பெற்றவர்கள் குறித்து செய்தித்தாள்களில் படித்து வந்த நானே, தற்போது அந்த செய்தியில் இடம்பெறுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. பரிசுப் பணத்தில் எனது சகோதரருக்கு வீடு வாங்கிக் கொடுக்க உள்ளேன். பாதியில் நிறுத்திய எனது வணிகவியல் படிப்பை மீண்டும் தொடங்கி, இந்த பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து கற்றுக் கொள்ளப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை