அன்னிய செலாவணி இருப்பு: தங்கத்தின் மதிப்பால் உயர்வு
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது.
கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 499 கோடி டாலர், அதாவது, 37 ஆயிரத்து, 425 கோடி ரூபாய் உயர்ந்து, 52 ஆயிரத்து, 263 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, தற்போதைய இந்திய மதிப்பில், கிட்டத்தட்ட, 39.20 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இதையடுத்து, அன்னிய செலாவணி இருப்பு புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. இதற்கு இருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு அதிகரித்தது முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இதற்கு முந்தைய வாரத்தில், அதாவது, ஜூலை 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இருப்பு, 9,563 கோடி ரூபாய் அதிகரித்து, 51 ஆயிரத்து, 764 கோடி டாலராக உயர்ந்து இருந்தது. இந்திய மதிப்பில் இது, 38.82 லட்சம் கோடி ரூபாய்.
கடந்த ஜூன் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பானது, அரை லட்சம் கோடி டாலர் என்ற நிலையை, முதல் முறையாக தாண்டியது. அதாவது, 50 ஆயிரத்து, 170 கோடி டாலர் என்ற நிலையை எட்டியது. மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு நாணய சொத்து மதிப்பு, 360 கோடி டாலர் அதிகரித்து, 48 ஆயிரத்து, 48 கோடி டாலராக உயர்ந்துள்ளது.மேலும், தங்கத்தின் இருப்பு மதிப்பு, 1.36 கோடி டாலர் அதிகரித்து, 3,610 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.71 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.